அமலாக்கத் துறை விசாரணையில் உள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு உத்தரவை நிறுத்தி வைத்திருப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் மாளிகை தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஆளுநர் உத்தரவு
அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை முறையே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகிய நிலையில், நேற்று இரவு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணமோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் கடுமையான குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, விசாரணையில் செல்வாக்கு செலுத்தி, சட்டம் மற்றும் நீதி வழங்கப்படுவதை தடுக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது சட்டத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கம் செய்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவே அந்த உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“