தமிழகம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி அரியமங்கலம் 16, 35 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரியமங்கலம் மண்டலம் 3-ல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன், வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, வருவாய் கோட்ட அலுவலர் அருள், தாசில்தார் சக்திவேல், முருகன், உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன், இளைநிலை பொறியாளர் ஜோசப், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் நலமுடன் உள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்.
ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம். திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். பள்ளி பொதுத்தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வார காலத்தில் வெளியிடப்படும்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டுமென பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் தி.மு.க-வில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை" என்று அவர் கூறினார்.
முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கேரள முதல்வரான மறைந்த அச்சுதானந்தன் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.