அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
Tamil Nadu minister Senthil Balaji - Ma. Subramanian Tamil News: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
Advertisment
இதனையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 மணி நேரம் நடைபெற்ற ஆபரேசன் முடிந்து ஐ.சி.யூ வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சு கேள்வி
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு கூறினார். அப்போது அவர், 'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு நாட்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.' என்று கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன என்று கேட்கப்பட்ட போது, அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'இருதய அறுவை சிகிச்சையை 15 ஆயிரம் பேர் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil