v-senthil-balaji | tamil-nadu: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மாற்றியது.
செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்ட நிலையில், அடுத்த காவல் நீட்டிப்புக்கு அவர் நேரில் ஆஜராக தேவையில்லை எனவும், காணொலி வாயிலாக ஆஜாரனால் போதுமானது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
செப்.20 ஆம் தேதி தீர்ப்பு
இதைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தவிட்ட நீதிபதி அல்லி மனு மீதான விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி அல்லி இன்று விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
பரபரப்பு வாதம்
முன்னதாக, செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் கிடைக்குமா? அல்லது அவருக்கான காவல் மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்விகளுடன் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. நீதிபதி அல்லி முன்பு நடந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதங்களை அடுக்கினார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதம் வைத்தார்.
அப்போது 'நீங்கள் ஏன் பா.ஜ.க-வில் இணையக்கூடாது? என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் வழக்கறிஞர் கபில் சிபல். மேலும், செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல என்றும் கபில் சிபல் வாதிட்டார்.
இருப்பினும், "செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“