கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், 54 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு, அடிக்கல் நாட்டிலும் முடிவு உற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியின் வளர்ச்சியில் முதல்வர் தனி கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறார். அதேபோல தொடங்கப்பட்டு இருக்கும் பணிகளையும் விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
கோவையில் உள்ள விநாயகபுரம் பகுதியில், வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கான அந்த பகுதியை தேர்வு செய்து இருந்தோம். ஆனால் அப்பகுதி மக்கள் எங்களுக்கு விளையாட்டு மைதானத்திற்காக அந்த பகுதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று மாற்று இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து இருக்கிறோம்.
இதை சொன்னவுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதையும் ஏற்றுக் கொண்டு விரைவில் செய்து கொடுக்கிறோம் என கூறி வந்து இருக்கிறோம். இதுபோன்று முதல்வர் கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
உச்ச நீதிமன்றம் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து இருப்பதைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டக் கூடிய ஆளுமையாக வழிகாட்டக் கூடிய தலைவராக இருப்பது, ஸ்டாலின் அவர்கள் தான். அவர்கள் சிறப்பான ஒரு முன்னெடுப்பை எடுத்து நீதிமன்றத்தின் மூலம், அதனை நிலை நாட்டி இருக்கிற. இது ஒரு வரலாற்று சாதனையாக நாங்கள் பார்க்கிறோம். வரக் கூடிய எதிர்கால சந்ததியினரும் இதனை தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் நீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முதல்வர் பெற்று தந்து இருக்கிறார். முதல்வர் பெற்று தந்து இருக்கக் கூடிய தீர்ப்பை நாட்டு மக்கள் அன்போடு வரவேற்று இருக்கிறார்கள்
கோவை மாவட்டத்தில், இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை என்பது வரவே, வராது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு இருக்கிறது. தேவை ஏற்படக் கூடிய பணிகளையும் விரைவாக, செய்து முடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குடிநீர் திட்ட பணிகள் மட்டுமல்லாது, கோவை மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ ? அதே போல ஊரக பகுதி சாலைகளை மேம்படுத்துவதற்கு ஏறத்தாழ 30 கோடி ரூபாய் இந்த ஆண்டு முதல்வர் வழங்கி இருக்கிறார்.
இதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற உடன் ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது சாதாரணமாக ஒரு வாரத்தில் செய்யக் கூடிய வேலை இல்லை, அதற்கான இடங்களை தேர்வு செய்து வடிவமைப்புகளை தயார் செய்து, திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலை பெற்றால் மட்டும் தான் சர்வதேச போட்டிகளை கூட நடத்த முடியும் அதற்கான, பணிகள் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது விரைவில் அந்த பணிகளையும் தொடங்கி இருக்கிறோம்.
கிணத்துக்கடவு பகுதியில், வயதிற்கு வந்த குழந்தையை வெளியில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்தது குறித்து தற்போது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் யாராவது தவறு செய்து இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரவு நேரங்களில் அதிக மின்வெட்டு ஏற்படுகிறது என்பதுபோன்ற எந்த புகாரும் மின்வாரியத்திற்கு வரவில்லை. ஏதாவது பழுது காரணமாக கூட மின்வெட்டு ஏற்பட்டு இருக்கலாம். யாராவது குறிப்பிட்டு கூறினால் அதை இன்று நான் நிச்சயம் ஆய்வு செய்து கொடுக்கிறேன். தேவைக்கு அதிகமான மின்சாரம் தற்போது நமக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது. கோடை காலத்தில் மிக சிறப்பாக எந்த வித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.