/indian-express-tamil/media/media_files/2024/12/11/zF8I2fDCJLkl392hvpij.jpg)
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல் செய்த நிலையில், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய இருக்கிறாரா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, அவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை மனு தாக்கல் செய்தார். அவரின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நிலையில், இறுதியில் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலே செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டது. இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா மற்றும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
மார்ச் 25 அன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள், "செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு தெரிவிக்க கூறி இருந்தோம். ஆனால் அதனை அவரது தரப்பு முறையாக பின்பற்றவில்லை. அதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்." என்று கூறினர். மேலும், 10 நாட்களுக்குள் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிட்டு, மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்படாது என்றும் நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடந்த 23 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள், "ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?" என கேள்வி எழுப்பினர். மேலும், "ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு மெரிட் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறியதன் காரணமாகவே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சாட்சிகளை செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கவில்லை." என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்
அத்துடன், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது குறித்து வருகிற 28 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கெடு விதித்தனர். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் நடந்த இன்றைய கூட்டத்தொடரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல் செய்தார். உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். ஆனால், நிகழ்ச்சி நிரல் குறித்து அச்சடிக்கப்பட்ட காப்பியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது அவருக்குப் பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா பேரவை கூட்டத்துடன் இறுதி நாள் அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும். அப்போது இன்று தாக்கல் செய்த அமைச்சர்கள் அதற்கு பதில் அளித்து பேசுவார்கள். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று அல்லது நாளை தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ள இருக்கிறது. அவர் இன்றைய தினம் இந்த சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தால், மசோதா நிறைவேற்றம் செய்யும் பேரவையின் இறுதி நாளன்று செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவருக்குப் பதிலாக அமைச்சர் ரகுபதி அந்த மசோதாவை தாக்கல் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.