செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
இதன்பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின்,
சில தடைகள் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். நாடாளுமன்றத்தில் நடந்ததை டிவியில் பார்த்திருப்பீர்கள். அதாவது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ. 2,000 கோடியைத் தருவோம் என்று திமிராகப் பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல் கல்வியிலிருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை திட்டங்களும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, குழந்தைகளுக்குக்கூட பொதுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கு நீட் மாதிரியான நுழைவுத் தேர்வு... இப்படி நிறைய இருக்கிறது என்றார்.
கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்துக்கு இந்த கொள்கை வழிவகுக்குகிறது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால்தான் கல்வி நிதியைத் தருவோம் என்று அமைச்சர் பிரதான் பிளாக்மெயில் செய்கிறார். அதனால்தான் ரூ. 2,000 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தந்தாலும் உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக திட்டவட்டமாகச் சொன்னேன்.
இந்த மேடையிலும் இதனை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அநாகரிகமானவர்கள் என்று அமைச்சர் பிரதான் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். அரை மணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கின்றனர் நம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள். அவர்களுடைய போர்க் குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதிமுக உறுப்பினர்களைப்போல் அல்லாமல் யாருக்கும் பயப்படாமல் உரிமைக்காக போராடுவோம் என்று திமுக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கிறார்கள்" என்று ஸ்டாலின் கூறினார்.