தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 6 மாதம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி-2025 முதல் ஜூன்-2025 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, 42 மையங்களில் வரும் 21 டிசம்பர்-2024 முதல் 31 ஜனவரி-2025 மாதம் வரை விடுமுறையின்றி, அனைத்து நாட்களும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை வழங்கப்படும். அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
ஆவணங்கள்
சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற, இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை ) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன். தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“