கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், "முதல்வரின் உத்தரவுக்கிணங்க கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறோம். பழைய அவிநாசி மேம்பாலம், செம்மொழி பூங்கா, பில்லூர் குடிநீர் 3, சாய்பாபா காலணி மேம்பாலம், குறிச்சி ஹவுசிங் யூனிட் சாலை பணிகள் ஆகிய பகுதிகள் மற்றும் திட்டப் பணிகளின் நிலையையும் ஆய்வு செய்கிறோம்.
மழைக்காலங்களில் மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அவிநாசி மேம்பாலத்தின் கீழ் முன்பு மழைநீர் தேங்கும் நிலை இருந்தது. தற்போது புதிய மோட்டார் மற்றும் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டு தண்ணீர் தேங்காத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல், லங்கா கார்னர் பாலத்தில் புதிய ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேம்பாலங்களின் அருகே சம்ப் அமைக்க இடம் கேட்டு ரயில்வே துறையிடம் கேட்டுள்ளோம். இடம் கிடைத்தால் புதிய சம்ப் அமைக்கப்பட்டு மழை நீர் உடனடியாக வெளியேற்றும் பணிகள் நடைபெறும். சிவானந்த காலணி ஏ.ஆர்.சி மேம்பாலத்தில் தண்ணீர் நேரடியாக பாலத்திற்கு செல்லாமல் மறுபுறம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகரில் மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு மோட்டார்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் மழை நீர் வெளியேற்றப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் தூர்வாரி செப்பனிடப்பட்டதால் மழை நீர் தேங்காத வகையில் உள்ளது. மேலும், சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவதையும் தடுத்திட அந்தந்த பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பில்லூர் 3 திட்டம் வந்த பிறகு 74 கி. மீ நீளப் பணிகளில் 54.8 நிறைவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புகள் 1.5 லட்சம் தரவேண்டும், அதில் 88 ஆயிரம் தரப்பட்டுள்ளது. 23 இடங்களில் மேல் தேக்க தண்ணீர் தொட்டி பணிகள் முடிவு பெற்றுள்ளது.
சிறுவாணி நீர் குறித்து கேரளா அரசு உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கடந்த முறை கேரளா அரசு உடன் பேசிய போது உரிய வகையில் சிறுவாணி நீர்மட்டத்தின் அளவு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூயஸ் 24 மணி நேர குடிநீர் அடுத்த வருடத்திற்குள் 80 சதவிகிதப் பணிகள் முடிவடையும். மாநகராட்சியாக இருந்தாலும், சூயஸ் ஆக இருந்தாலும் அதற்கான தொகையை அரசு தான் வழங்குகிறது. மக்கள் மத்தியில் சுயஸ் திட்டம் குறித்து எந்தவித அதிருப்தியும் இப்போது இல்லை. சரியாக குடிநீர் வழங்கப்படுவதே முக்கியமாக உள்ளது.
இதேபோல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மழைக் காலங்களில் பாதாள சாக்கடை நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் பாரிகேட் அமைக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்ய மாநகராட்சி நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாக்கடைகளில் ரோபோக்களை கொண்டு கழிவுகளை அகற்றுவதற்கு ஐஐடி உடன் இணைந்து பேசி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“