தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 இடங்களில், 165 வார்டுகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது, மீதமுள்ளவற்றை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிகே மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்குப் பங்கிடுகின்றன.
குறிப்பாக திருவொற்றியூர் குடியிருப்பு விபத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை காப்பாற்றிய திமுக வட்ட செயலாளர் தனியரசுக்கு, அக்கட்சி 10வது வார்டில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதேபோல’ 99வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவகாமி ஐ.ஏ.எஸ்.க்கு போட்டியாக அதே வார்டில் பரிதி இளம்வழுதியின் மகள்’ பரிதி இளம் சுருதி போட்டியிடுகிறார்.
மேலும்’ கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் மகன்’ ராஜா அன்பழகனுக்கு 141-வது வார்டில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதி தற்போதைய தி.நகர் எம்.எல்.ஏ. வாக உள்ளார்.
இப்படி பல கட்சிகளும், சென்னைவாசிகளுக்கு பழக்கமான முகங்களை களத்தில் நிப்பாட்டியுள்ளனர். அந்தவகையில் சென்னை பாடியில் 90 ஆவது வார்டில்’ நடிகை ஜெயலட்சுமி’ பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலக்ஷ்மி, நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. நிச்சயம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நான் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சினேகம் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். வார்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடி வந்து உதவிகளை செய்துள்ளேன். இது நிறைய பேருக்கு தெரியும். பாடியில் நிச்சயம் தாமரையை மலர வைத்தே தீருவேன் என அவர் என கூறினார்.
கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன், சினேகா நடித்த 'பிரிவோம் சந்திப்போம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஜெயலட்சுமி. பின்னர் மாயாண்டி குடும்பத்தார், அலை பேசி, வேட்டைக்காரன், முத்துக்கு முத்தாக, அப்பா விசாரணை மற்றும் கோரிபாளையம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அறிவழகன் இயக்கிய 'குற்றம் 23' படத்தில் தனது நடிப்பிற்காக ஜெயலக்ஷ்மி நன்கு பாராட்டப்பட்டார். கேளடி கண்மணி, தமிழ் கடவுள் முருகன், கல்யாண பரிசு, முள்ளும் மலரும் மற்றும் பூவே உனக்காக' போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.
இப்படி இருக்க, கடந்த ஆண்டு’ ஜெயலக்ஷ்மி’ பாஜகவில் இணைந்தார், மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன், கீதா என்ற பெண்’ ஜெயலட்சுமி தன்னை துன்புறுத்துவதாக பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த மனுவில், நடிகை ஜெயலக்ஷ்மி’ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாக கூறினார். பிறகு சில நாட்கள் கழித்து எங்கள் விண்ணப்பங்கள் கேன்சல் ஆகிவிட்டதால், தொழில் தொடங்க தேவையான பணத்தை தானே தருவதாக கூறினார். கடன் தொகையை முழுவதுமாக செலுத்தி விட்டேன். ஆனால்’ இதுவரை செலுத்தியது வட்டி என்றும் மேலும் அசலை செலுத்த வேண்டும் என, ஜெயலட்சுமி இரவு நேரத்தில் இரு நபர்களை தனது வீட்டிற்கு அனுப்பி மிரட்டுகிறார் என கீதா குற்றம்சாட்டினார்.
இதை மறுத்த ஜெயலக்ஷ்மி’ தன் மீது பொய் புகார் கூறிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் இதை சுட்டிக்காட்டி பாஜகவையும், ஜெயலக்ஷ்மியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“