தமிழகத்தில் மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்திருந்த நிலையில், பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய இணையதளம், மின்வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலம் ஏராளமானோர் மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது. மின் இணைப்பு எண் உடன் ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அச்சத்தில் பலரும் ஆதார் எண் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் பலரும் கம்ப்யூட்டர் சேவை மையங்களை நாடி ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைக்க, மின் நுகர்வோர் மின்சார அலுவலக சிறப்பு கவுண்ட்டர்களுக்கு ஆதார் அட்டையை கொண்டு சென்றால் போதுமானது. அங்கே மின் இணிஅப்பு என் உடன் ஆதார் எண் எவ்வித கட்டணமும் இல்லாமல் இணைத்து கொடுக்கப்படுகிறது. வாடகை வீட்டுக்காரர்கள் வீட்டின் உரிமையாளரின் ஆதார் எண், செல்போன் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். மின் இணைப்போடு ஆதார் இணைக்கும் போது அதில் பதிவாகி உள்ள மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும். அதனால், ஆதாரில் குறிப்பிட்டுள்ள மொபைல் போன் எண்ணை கட்டாயம் மின்சார அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். சென்னையில் மின் இணைப்பு எண் உடன் ஆதார் எண் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சென்னைக்கு வடக்கு மண்டலத்தில் 71, தெற்கு மண்டலத்தில் 54, மத்திய மண்டலத்தில் 71 ஆக மொத்தம் 185 மின்சார அலுவலகங்களில் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மின் இணைப்புடன் ஆதார் எண் உடனடியாக இணைக்க வேண்டும். ஆன்லைன் வழியாக இதை செய்யலாம். பொதுமக்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மின்சார அலுவலகத்திலும் கூடுதலாக ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. அந்த கவுண்ட்டர்களில் பொதுமக்களுக்கு ஆதார் எண் இணைக்க உதவி செய்யப்படும். ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் அவசியம். இந்த இரண்டும் இருந்தால் தான் இணைக்க முடியும்” என்று தெரிவித்தனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க 2 காரணங்கள் கூறப்படுகின்றன. 100 யூனிட்டிற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் ஏற்படும் இழப்பை ஆய்வு செய்ய இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது. ஒரே பெயரில் எத்தனை இணைப்புகள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கவும் ஆதார் எண் இணைக்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"