/indian-express-tamil/media/media_files/TQjpclqj4WqgLowPnmpz.jpg)
இந்த பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒப்பந்தம் அல்லது தற்காலிகமாக காலி இடங்களை நிரப்ப அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் கேங்மேன் தொழிற்சங்க வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக் கோரி திருவள்ளூரைச் சேர்ந்த புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 36,000 காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் ஆகஸ்ட் 22-ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். விழா காலங்கள் நெருங்கி வரும் நிலையில் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மின்வாரியம் தரப்பில், இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேங்மேன் தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் மின்வாரிய தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒப்பந்தம் அல்லது தற்காலிகமாக காலி இடங்களை நிரப்ப அறிவுறுத்தினர்.
இதற்கு, மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மின் பகிர்மானக் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு உத்தரவாதத்தை ஏற்று, பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கேங்மேன் தொழிற்சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.