மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திராவ். இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு சலுகை வழங்குவது சட்டவிரோதம் என அறிவித்து, பல்கலைக் கழகங்களில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனால், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. ஆகையால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரி சக்திராவ் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த 4 பேர் போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர். அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தமிழ் வழி சான்றில் பிரச்சனை இல்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று 16 நபர்கள் சான்றிதழை சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் 3 நபர்கள் மீது சந்தேகம் உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், "நம்முடைய இந்தியாவில், லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு இரவு நேரங்களில் கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு படித்து தேர்வுகளை எழுதுகின்றனர்.
இதுபோன்று குறுக்கு வழியில் போலியான சான்று பெற்று தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்ட விரோதமானது. இது ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயலாகும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர பிற பல்கலைக்கழகங்களில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2 மாத அவகாசம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“