மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் மதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
தைப்பொங்கல் 2025 பண்டிகை திருநாள் 14.01.2025 அன்று வருவதை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை போக்குவரத்துக் கழக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகளும் மற்றும் சிறப்பு பேருந்துகளும் தைபொங்கல் பண்டிகைக்கு முன்பு 10.01.2025 முதல் 13.01.2025 வரை 455 பேருந்துகளும் மற்றும் பண்டிகைக்கு பின்பு 14.01.2025 முதல் 19.01.2025 வரை 725 பேருந்துகளும் மதுரை, திண்டுக்கல் தேனி, பழனி விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்போக்குவரத்துக் கழகம் மூலம் தைப்பொங்கல் 2025 பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும்பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in, TNSTC Mobile App கைபேசி செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள் / கண்காணிப்பாளர்கள் / பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.