சென்னை மாநகரில் தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இவற்றை தினசரி பயன்படுத்துவதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்னை போன்றவை ஏற்படுகின்றன. குறிப்பாக பார்க்கிங் தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அது சிக்கலை மேலும் அதிகரித்துவிடும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்மார்ட் பார்க்கிங் முறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்கு தீர்வு: ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல், நேரம் மற்றும் எரிபொருள் விரயம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்டவற்றை தடுக்க முடியும். விதிமீறல்களை தடுத்தல், டிஜிட்டல் பேமெண்ட் முறையை பயன்படுத்துதல், நகர்ப்புறத்தில் சீரான போக்குவரத்து உள்ளிட்டவற்றை செயல்படுத்த முடியும். இந்நிலையில் தான் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மூலம் சில நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா நகரில் ஸ்மார்ட் பார்க்கிங் முறை அமல்படுத்தவுள்ளனர்.
இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன. தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்களின் பயன்பாடு அண்ணா நகரில் உள்ளது. தற்போதைய சூழலில் 5-வது அவென்யூ, 15-வது மெயின் ரோடு ஆகியவற்றில் மட்டுமே சிறு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து தெருக்களிலும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அதுவும் ஒரே இடத்தில் நிரந்தரமாக கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதனால் பார்க்கிங் பெரிய பிரச்னையகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணா நகரில் தினசரி 5,000 வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. அதில் 3,000 வாகனங்கள் பீக் ஹவர்களில் வந்துவிடுகின்றன. ஆனால் 2,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு தான் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
நெருக்கடி பகுதியாக இருப்பதால் மல்டி லெவல் பார்க்கிங் தான் சிறந்தது என்கின்றனர். இந்த சூழலில் முதன்மையான மற்றும் இரண்டாம் கட்ட தெருக்களில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையோர ஸ்மார்ட் பார்க்கிங் முறையை அமல்படுத்த CUMTA முடிவு செய்துள்ளது. இதற்கான முதல்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு தரப்பினரின் ஆலோசனையை CUMTA பெற்றிருக்கிறது. இதையடுத்து 25 கிலோமீட்டர் தூர ஸ்மார்ட் பார்க்கிங் முறையை அமல்படுத்துவதற்கான வேலைகள் முடுக்கி விடப்படவுள்ளன.
ஸ்மார்ட் பார்க்கிங் முறை எப்படி செயல்படுத்தப்படும்? செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் நேர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ட்ரக்குகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.60, கார்களுக்கு 40 ரூபாய், இருசக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து கட்டணம் செய்யும் வகையில் 500 மீட்டர் இடைவெளியில் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர். இவர்கள் 2 ஷிப்டுகளில் வேலை செய்வர். மொத்தம் 100 பேர் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின் கீழ் பணிபுரிவர் எனத் தெரிகிறது. இவர்கள் கேமரா வசதியுடன் இருப்பர்.
கட்டணம் செலுத்தாத வாகனங்கள், கூடுதல் நேரம் நிறுத்தப்படும் வாகனங்கள், பார்க்கிங் அல்லாத பகுதிகளில் நிறுத்துதல் போன்றவற்றை கண்காணிப்பர். ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது அண்ணா நகரின் நெருக்கடி சற்றே குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.