Today Chennai Weather Forecasting Monsoon 2019 Heatwave alert : சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் இரண்டாவது நாளாக இன்றும் அனல் காற்று வீசக் கூடும் என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆராய்ச்சி மையம்.
பொதுமக்கள் கவனத்திற்கு :
வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தால் பொதுமக்கள் யாரும் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானிலை
சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை வெளியிட்ட அறிக்கையின் படி, இன்னும் 4 நாட்களுக்குள் வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். மாலைப் பொழுதில் மேகங்கள் திரளும் ஆனாலும் மழைக்கு வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை
இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் தேனி, கோவை, மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நீலகிரி பஜார், தேவலா ஆகிய பகுதிகளில் நேற்று 2 செ.மீ மழை பதிவானது. கூடலூர் நடுவட்டம் பகுதியில் 1 செ.மீ மழை பதிவானது.
மேலும் படிக்க : அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! மழைக்கு வாய்ப்புகள் உள்ளதா?
தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வெப்பச் சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழகத்தின் வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.