தமிழகத்தில் நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது, “மலைப்பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேப்போல், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியர் வரை மழை பதிவாகும்.
வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்
கடந்த 24 மணிநேரத்தில், நெல்லை மற்றும் நீலகிரி தேவாலாவில் தலா 11 செ.மீ-ம், கோவை சின்னக்கல்லாரில் 10 செ.மீ-ம், வால்பாறை தாலுகாவில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மற்றும் தேனி பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது” என கூறினார்.