Latest TN Weather Report: தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நீடித்து வரும் வெயில் அதிகபட்சமாக 106 டிகிரியை தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என நேற்று வானிலை ஆய்வு யைமம் அறிவித்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்து பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மயிலாபூர், மந்தைவெளி, அடையாறு, மத்திய கைலாஷ், திருவான்மியூர், கிண்டி, பெசன்ட் நகர், ஈக்காட்டுதாங்கல், வடபழனி, மூலக்கடை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சென்னை மயிலாப்பூரில் 4.8 செமீட்டரும், புரசைவாக்கத்தில் 3.8 செ.மீட்டரும், கிண்டியில் - 3.5 செமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
நீலகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இது மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமாகியுள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
கோவை, மதுரை, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
'40-50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 48 மணிநேரத்திற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”