தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் மொத்தம் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.
இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்படும். தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் ஒரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி கட்டணம் உயர்த்தப்படும். மற்றொரு பகுதி சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறை இவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கொரோன வைரஸ் பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழகத்தில் உள்ள மற்ற 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளான, ராசம்பாளையம் (நாமக்கல்) ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்) எலியார்பதி (மதுரை), சமயபுரம் (திருச்சி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), விஜயமங்கலம் (குமாரபாளையம்), பாளையம் (தருமபுரி), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி, திருமாந்துறை (விழுப்புரம்), வாழவந்தான் கோட்டை (தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்), விக்கிரவாண்டி (விழுப்புரம், திருப்பராய்த்துறை (திருச்சி - கரூர்) ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்த சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால், ரூ.5 முதல் ரூ.10 வரை சுங்கக் கட்டணம் உயர உள்ளது. இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறினார்.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு வாகணங்களுக்கான போக்குவரத்து கட்டணம் உயரும். இதனால், காய்கறி, மற்றும் அத்தியாவசிய சரக்கு வாகனங்கள்போக்குவரத்து செலவு அதிகரிக்கும் என்பதால் அவற்றின் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்த கொரோனா வைரஸ் பரவல் பேரிடர் காலத்திலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தவறாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.