தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை(7.3.18) முதல் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதன்முதலாக நடைபெறவுள்ள பிளஸ் 1 பொதுத்தேர்வு குறித்த எதிர்ப்பார்ப்பு மாணவ- மாணவிகளிடம் அதிகரித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த தேர்வில் 7 ஆயிரத்து 70 மேல்நிலை பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுதுகின்றனர்.
மாணவர்களை விட கூடுதலாக 58,897 மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 49 ஆயிரத்து 422 பேரும், புதுச்சேரியில் 150 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 404 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்பட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன. 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுகின்றனர்.
சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சியைச் சேர்ந்த 62 ஆண் சிறைவாசிகள் தேர்வு எழுதவுள்ளனர்.
நாளை தேர்வு எழதவுள்ள அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் எந்தவித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல் சிறந்த முறையில் தேர்வினை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.