/indian-express-tamil/media/media_files/casgObG2lQAP2zF5h8yN.jpg)
பல் பிடுங்கப்பட்ட வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சுற்றியுள்ள காவல் நிலையங்களில், புகார்கள் மற்றும் வழக்குகளில் விசாரணைக்காக காவல்நிலையம் வந்தவர்களிடம் விசாரணை நடத்தும் போது அங்கே ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், அவர்களுடைய பல்லைப் பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஏ.எஸ்.எபி பல்வீர் சிங் உட்பட 15 பேர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆசிஸ் கோயல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு டி.ஜி.பி. பதில் அளித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்கி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி எடுத்த நடவடிக்கைகள் குறித்து இதுவரை அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில், மார்ச் 1-ம் தேதி புதுடெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் தமிழ்நாடு டிஜி.பி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், டி.ஜி.பி தனது அறிக்கையை பிப்ரவரி 23ம் தேதிக்குள் சமர்ப்பித்தால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 4 முறை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நினைவூட்டல் வழங்கப்பட்டும் தமிழக டி.ஜி.பி. இடம் இருந்து எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.