ஜெயலலிதா நினைவிடத்தை அகற்றக் கோரிய வழக்கில் வலுக்கட்டாயமாக தள்ளுபடி செய்ததாக டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக நீதிதுறை பதிவாளரிடம் கடிதம் கொடுக்க தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு அறிவுறுத்தல்.
முன்னாள் தமிழக முதலமைச்சர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ராமசந்திரன், ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வழக்கறிஞர் துரைச்சாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதே போன்று டிராபிக் ராமசாமி சார்பில் தாக்க செய்த மனுவில், மெரீனா கடற்கரையில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் வளாகத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரி கடந்த 7ஆம் தேதி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி.ஜி.ரமேஷ், எஸ்.எஸ்.சுந்தர், ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏற்கனவே நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள் அனைத்து திரும்ப பெறுவதாக மனுதரார் தெரிவித்ததை அடுத்து அனைத்து மனுகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டு கருணாநிதிக்கு அண்ணா நினைவிட வளாகத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இன்று தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, நீதிபதி எம.துரைசாமி ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு வழக்கு விசாரணையை தொடங்கிய போது டிராபிக் ராமசாமி ஆஜராகி, ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்ட நினைவிடம் தொடர்பாக தனது வழக்கில் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் செயல்பட்டதாகவும், வழக்கில் வலுக்கட்டாயமாக எனது மனுவை தள்ளுபடி செய்யபட்டுள்ளதாகவும், இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும். வேறு நீதிபதிகள் அமர்வில் விசாரணையை மாற்ற வேண்டும் இது தொடர்பாக பதிவாளரிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக புதிதாக நீதித்துறை பதிவாளரிடம் புகார் மனு அளிக்க டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்தினர்.