கோவையில் கட்சி கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் இளம் பெண் படுகாயம் அடைந்த கூறப்படும் விவகாரம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. அவினாசி சாலை சின்னியம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், வழக்கம் போல் கடந்த 11ஆம் தேதி காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே சாலையோரத்தில் நடப்பட்டிருந்த கட்சி கொடி கம்பம் ( அதிமுக ) கீழே விழுந்ததாகவும். கொடி கம்பத்தின் மீது ஏறாமல் இருக்க வாகனத்தை பதட்டத்துடன் திருப்பியபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரி பின்னால் வந்த லாரி இவர் மீது ஏறிய விபத்துக்குள்ளானதில், அவரின் இரண்டு கால்களிலும் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிட்டார். அவர் ஏற்கனவே பேனர்கள் அனுமதியின்றி வைக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது அனுமதியின்றி கட்சி கொடி கம்பம் சாலையில் வைத்ததில் ஏற்பட்ட விபத்தில் கோவையில் இளம் பெண் படுகாயம் அடைந்துள்ளார் இது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் போது விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.