கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது.
1. முன்னதாக, வெவ்வேறு ரயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன. இது குழப்பமாக இருப்பதால் பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரியாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி மே 1 ஆம் தேதியில் இருந்து மெயில், எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என இந்த வகை ரெயிலாக இருந்தாலும், அனைத்து ரெயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
2. தட்கல் மூலம் கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிலும் இப்போது முன்பதிவு நேரங்கள் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஏசி வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவுகள் காலை 10 மணிக்கும் ஸ்லீப்பர் வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளை காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம். அதேபோல ஒரு பயனர் ஐடி ஒரு நாளைக்கு 2 தட்கல் டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
3. புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கும் முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்களுக்கு 50 சதவீத பணம் திரும்பப் கிடைத்துவிடும். 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது.
சார்ட் தயாராகும் நேரத்தில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. ரயில்வே மட்டுமல்லாது பிற துறைகளின் விதிகளில் முக்கிய மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.