ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலை பேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
ரயில்களில் வழங்கப்படும் போர்வைகளை சுத்தப்படுத்தும் பணி தொடர்பான டெண்டர் பிரீமியர் கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. டெண்டர் வழங்கும் போது 30 நாள்களுக்கு ஆய்வு முறையில் அனுமதிப்பதாகவும் இந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டால் டெண்டர் நீட்டிக்கப்படும் என விதிகள் ஏற்படுத்தப்பட்டது.
30 நாள்கள் முடிவில் பணியில் குறைபாடுகள் உள்ளதாக கூறி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அதில், மீண்டும் தங்கள் நிறுவனத்திற்கு ஒதுக்க தெற்கு ரயில்வே உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்க மறுத்து உத்தரவிட்டார். மேலும் புதிய டெண்டர் இரண்டு வாரங்களில் முடிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தன்னுடைய உத்தரவில் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் சுகாதாரம் இல்லாமல் இருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
பயணிகள் செலுத்தும் கட்டண தொகையில், சொகுசு வாழ்க்கை வாழும் ரயில்வே உயரதிகாரிகள் ரயில்களை குறைந்தபட்ச சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார். குளிர்சாதன வசதி படுக்கை கொண்ட ரயில் பெட்டிகளில் போர்வைகள் சுத்தமாக இருப்பதில்லை என ஏராளமான புகார்கள் வருவதாக தெரிவித்த நீதிபதி, இரவு நேரங்களில் இரண்டாம் வகுப்பு ரயில் உள்ளிட்ட அனைத்திலும் எலி மற்றும் கரப்பான் பூச்சிகளால் பயணிகள் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான புகார்கள் மீது நெடுங்காலமாக நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்து புகார் அளிக்க தனி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த தொலைபேசி எண்களை ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயும், ரயில் நிலையங்களிலும் இடம்பெறச் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.