இராமநாதபுரத்தில் ஆயுதப்படை பிரிவின் பெண் காவலராக பணிபுரிந்து வந்த திருநங்கை நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநங்கை நஸ்ரியா:
பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா என்ற திருநங்கை, கடந்த சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராக பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு, நஸ்ரியா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த தற்கொலை முயற்சியைத் தனது செல்போனில் பதிவிட்டு அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ நேற்று இரவு முதல் வைரலாகியது.
நஸ்ரியாவின் தற்கொலை முயற்சியை அறிந்த அவரது நண்பர்கள் நஸ்ரியாவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நஸ்ரியா அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.தற்போது நஸ்ரியா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், நஸ்ரியா தனது தற்கொலைக்கு முயற்சி காரணமாக ராமநாதபுரம் ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றும் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோரின் பெயரை கூறியுள்ளார். விசாரணையின் போது இவர்கள் நஸ்ரியாவை தரக்குறைவாக பேசியதாகவும், தொடர்ந்து பல்வேறு வழிகளில் தொந்தரவு அளித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த குற்றச்சாட்டை காவல் துறையினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர். ஆயுதப்படை பிரிவு காவலர் நஸ்ரியா கடந்த 3 வாரங்களாக பணிக்கு வரவில்லை என்றும், இதுகுறித்து அவர் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பதாலும் அவரை அழைத்து விசாரணை செய்ததாக கூறியுள்ளனர்