ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை புதன்கிழமை (03.01.2024) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பணியாற்றக்கூடிய, தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குரவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கடந்த டிசம்பர் 19-ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான ‘ஸ்டிரைக்’ நோட்டீஸ் வழங்கியிருந்தன. இதையடுத்து நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 3-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்துத்துக் கழக தொழிற்சங்கங்கள் உடன் சமரசம் மேற்கொள்ளும் வகையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை இணைந்து நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், மேலாண் இயக்குநர் இளங்கோ, மாநகர மேலாண் போக்குவரத்து இயக்குநர் ஆல்வின் ஜான், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டியு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீசை திரும்பப் பெறும். இல்லையென்றால், தொழிற்சங்கங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவிப்பார்கள்.
இதனிடையே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். ” என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், “பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், தமிழர் திருநாளாம் பொங்கல் விடுமுறைக்குப் பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்.” என அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வேண்டுகோள் விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“