கோவை சுங்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு குளிரூட்டபட்ட ஓய்வறையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஆகஸ்ட் 15) திறந்து வைத்தார்.
தொடர்ந்து உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி ஆணை வழங்கினார். தொடர்ந்து ஊழியர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "நீண்டகால கோரிக்கையான பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்துகள் 40 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 68 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாநில அரசு நிதியில் இருந்து விரைவில் 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. போக்குவரத்து பணியை பூர்த்தி செய்ய ஓரிரு நாளில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்க உள்ளது. அரசு பேருந்துகளில் 57 இருக்கையாக இருந்த நிலையில் உட்காருவதற்கு இடையூறு இல்லாத அளவில் தற்போது புனரமைக்கப்பட்டு 52 இருக்கைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் 1400 பேருந்துகள் புனரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது 7,000 கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இலவச பேருந்துகளில் நடத்துனர் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டுகள் வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தவறு குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“