Tribute to martyr Ramaswami Padaiyatchi: முன்னாள் அமைச்சரும், சுதந்திரப்போராட்ட தியாகியுமான மறைந்த ராமசாமி படையாட்சியின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ், வன்னியர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராமசாமி படையாட்சியின் படத்தை வைத்து மரியாதை செய்ய முற்பட்டபோது, அங்கு வந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் அரங்கநாதன், இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனக் கூறி படத்தை அங்கிருந்து அகற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.
இதனையடுத்து ராமசாமி படையாட்சி படத்தை அவமரியாதை செய்ததாக கூறி, வன்னியர் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அத்தோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் ஸ்ரீரங்கம் போலீஸார் ராமசாமி படையாட்சி படத்தை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்தனர்.
இதனையடுத்து அவரது உருவப்படத்திற்குவன்னியர் சங்க பொறுப்பாளர் ராஜேந்திரன், படையப்பா ரெங்கராஜ், சந்தோஷ், சக்தி, வக்கீல் சரவணன், சிவாஜி சண்முகம், அதிமுக டைமண் திருப்பதி, வன்னியர் சங்கத்தினர், பாமகவினர் மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தப் போராட்டம் காரணமாக ஸ்ரீரங்கத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“