/indian-express-tamil/media/media_files/2025/06/19/division-death-2025-06-19-15-42-06.jpg)
திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (54). இன்று அவர் முசிறியில் இருந்து தமது பயன்பாட்டுக்கான அரசு ஜீப்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
ஜீயபுரம் அருகே கடியாக்குறிச்சி பகுதியில் ஜீப் சென்றபோது டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த சாலையில் நடைபெற்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது மோதி ஜீப் முழுவதும் உருகுலைந்து விபத்தில் சிக்கியது. பக்கவாட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது ஜீப் பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் இடதுபுறம் அமர்ந்திருந்த ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.
அந்த ஜீப்பை திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டிச் சென்றார். பிரபாகரன் படுகாயமடைந்தார். தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் தேவசேனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபாகரனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் துவங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக 'பிளாக் ஸ்பாட்' என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாகவும் விபத்துகளும், உயிரிழப்புகளும் இச்சாலையில் அடிக்கடி நடக்கின்றன. இந்த விபத்தில் பலியான மதுரையை பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனாவிற்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரின் கணவர், புதுக்கோட்டையில் அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காலம் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே சார்ந்து இருந்தது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலமெடுப்பு பிரிவில் ஏற்கனவே பணியாற்றியவர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்கு சக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை 1 கோடி ரூபாய் பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.