எம்,ஜி.ஆர் பங்களா பட்டாவில் சட்டவிரோத பெயர் மாற்றம்; ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான பங்களா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார்; ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான பங்களா அ.தி.மு.க பொதுச்செயலாளர் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார்; ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பங்களாவின் பட்டாவில் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மாற்றி, எம்.ஜி.ஆரின் வாரிசுகள் பெயரில் பட்டாவை மாற்றித்தர வேண்டும்’ எனவும் திருச்சி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இதுகுறித்து திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமாரிடம் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சர்வேயர் சார்லஸ் திங்கட்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி உறையூர் திருத்தாந்தோணி சாலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான பங்களா மற்றும் காலியிடம் 80,000 சதுரடி பரப்பளவில் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி இருக்கும்.
இந்த சொத்துக்கு, எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மகன் மற்றும் மகள்கள் 10 பேர் வாரிசுகளாக பதிவு செய்து, தங்களது பெயரில் பட்டா பெற்றனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில், வாரிசுகளின் பெயர்கள் நீக்கப்பட்டு, ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர்’ என பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர், அந்தப் பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என கணினி நிலப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் வாரிசுகளின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்க வேண்டும் என்றால், கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்து அவரின் ஆணை பெற்று பெயர்களை நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
இதுகுறித்து கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன். இதுதொடர்பாக, கோட்டாட்சியர் 1.10.2021 மற்றும் 18.10.2021 ஆகிய தேதிகளில் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது நிலப்பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் வாரிசு பெயர்கள் பதியப்படாமல் உள்ளதுடன், ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ என்ற பெயரும் நீக்கம் செய்யப்பட்டு, ‘பொதுச்செயலாளர் அ.தி.மு.க’ என கணினியில் பதியப்பட்டுள்ளது.
கோட்டாட்சியர் எந்த அடிப்படையில் ‘மதுரம் கணவர் கோவிந்தசாமி’ பெயரை நீக்கினார் என்றும் தெரியவில்லை. அதேசமயம் எம்.ஜி.ஆர் தனது பெயரில் கிரயம் பெற்று, பத்திரம் பெற்றுள்ள நிலையில், ‘பொதுச் செயலாளர் அ.தி.மு.க’ என்று பட்டாவில் பெயர் மாற்றம் செய்தது தவறு.
எம்.ஜி.ஆர் தனது சொத்தை அ.தி.மு.க.,வுக்கு பத்திரம் மூலம் வழங்கியிருந்தாரா அல்லது உயில் ஏதேனும் எழுதி வைத்தாரா என்பதை விளக்க வேண்டும். ஆகவே, இந்த விவகாரத்தில் ஆட்சியர், கோட்டாட்சியரின் அலுவலக கோப்பைப் பெற்று, கோட்டாட்சியர் செய்த விசாரணை மற்றும் உத்தரவை பரிசீலனை செய்து, வறுமையில் வாடும் எம்.ஜி.ஆரின் வாரிசுகள் பெயர்களை மீண்டும் நிலப்பதிவேட்டில் பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ்
இதுகுறித்து சார்லஸ் கூறியதாவது: எம்.ஜி.சக்கரபாணியின் மகன் சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர் பங்களா பட்டா பெயர் மாற்றம் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தார். கொரோனா பாதிப்புக்கு பின்னர், அவர் உயிரிழந்துவிட்டார். மற்ற எம்.ஜி.ஆர் வாரிசுகள், எங்கள் சித்தப்பா இடம் எங்களுக்கு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று உள்ளனர். ஆனால், முன்னாள் முதல்வருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றம் தவறாக செய்துள்ளனர். இதில் ஆட்சியர் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார்.