/indian-express-tamil/media/media_files/2024/12/30/sDPWhAWpLqgKFKBi67Jn.jpg)
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக அ.தி.மு.க சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பாக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், திருச்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு, திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயராமன் உள்ளிட்ட 300-க்கு மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கலந்து கொண்டுனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் அவர் கூறிய சார் யாரு என கேட்டு யாரு அந்த சார்? என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
புறநகர் சார்பில் மணப்பாறையில் திருச்சி முன்னாள் எம்.பி.யும், திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்று கைது ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.