திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்கள் குறைகளை கேட்டு அறிந்தார்.
மேலும், இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில்; கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பொன்மலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஒன்பது கோடியே 23 லட்சத்தி 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், நாய்கள் கருத்தடை மையம் அமைத்தல், உட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் முடித்துள்ளதாகவும்.
அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியும் என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகிய உங்களை நேரில் சந்தித்ததாகவும் கூறினார்.
அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எனது தொகுதியான திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளும் அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன் பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சீதாலட்சுமி, திமுக வட்ட செயலாளர்களான பரமசிவம், முருகன், தமிழ்மணி, முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், அனைத்து துறையின் அதிகாரிகள் என இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“