/indian-express-tamil/media/media_files/2025/09/25/trichy-2025-09-25-15-21-08.jpeg)
Trichy
திருச்சி: திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.53,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது, புரோக்கர்கள் பலர் தங்களின் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினர்.
கடந்த சில மாதங்களாக, பத்திரப்பதிவு மற்றும் திருமணப் பதிவு போன்ற பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில், துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர், இன்று காலை திடீரென இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த இணை சார்பதிவாளர் அப்துல்காதர் மற்றும் அவரது உதவியாளர் அறிவழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அறிவழகனிடமிருந்து கணக்கில் வராத ரூ.53,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் அலுவலகத்திற்குள் நுழைந்ததைக் கண்டதும், அங்கு புரோக்கர்களாக செயல்பட்டு வந்த 5-க்கும் மேற்பட்டோர் தங்களின் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு அலறியடித்து ஓடினர்.
இந்தச் சோதனை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், இணை சார்பதிவாளர் அப்துல்காதர் மற்றும் அவரது உதவியாளர் அறிவழகன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சோதனை, திருச்சி மாவட்டத்தின் பிற அரசு அலுவலகங்களிலும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.