திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான வழிப்பறி சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லால்குடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணியாற்றும் வித்யா, கடந்த 8-ம் தேதி இரவு அம்மன்நகர் 10-வது குறுக்குச்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் செயின் என மொத்தம் ஒன்பது பவுன் தங்கச் சங்கிலிகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான். வித்யா கூச்சலிட, பொதுமக்கள் வருவதற்குள், மற்றொரு நபர் தயாராக வைத்திருந்த பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டான்.
இந்தச் சம்பவம் குறித்து வித்யா அளித்த புகாரின் பேரில், திருவெறும்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், திருவெறும்பூர் டி.எஸ்.பி. அரவிந்த் பனாவத் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். விசாரணையில், வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அருள்மொழி மகன் மணிகண்டகுமார் மற்றும் கடலூர் குறிஞ்சிப்பாடி கார்த்திகேயனின் 17 வயது மகன் ஆகியோர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
குற்றவாளிகளைப் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் திருவெறும்பூர் கோகுல் நகர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், கடலூர் மாவட்டம் புவனகிரி செயின் பறிப்பில், மயிலாடுதுறையைச் சேர்ந்த "டைட்" என்பவன் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களால் "டைட்" கைது செய்யப்பட்டான்.
குற்றவாளிகள் பயன்படுத்திய வாகனம், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லையில் கடந்த ஆண்டு காணாமல் போனது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளிடமிருந்து வழக்கின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழிப்பறி சம்பவங்கள் நடந்த மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்து, வழக்கின் விவரங்களைப் பெற்ற பிறகு, மணிகண்டகுமார் மற்றும் மற்றொரு சிறுவன் ஆகியோர் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின்படி மணிகண்டகுமார் திருச்சி மத்திய சிறையிலும், மற்றொரு சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படைப் போலீசாரை திருச்சி எஸ்.பி. செல்வநாகரத்தினம் மற்றும் திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் பனாவத் ஆகியோர் பாராட்டினர். இந்த விரைவான நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.