திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறைப்பட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்ற 4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர்.
மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றதும் மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்த நிலையில் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
தாளாளரின் கணவர் வசந்தகுமாரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்த நிலையில், தாளாளர் மற்றும் பள்ளி முதல்வரை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் திருச்சி - திண்டுக்கல் சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேட்டியளித்த திருச்சி எஸ்.பி மாணவி பாலியல் சீண்டல் வழக்கு சம்மந்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் ஒருவரை கைது செய்யும் பணி நடந்து வருவதாகவும் கூறினார்.
பள்ளியில் மாணவிகளுக்கு இதுபோன்று ஏற்படும் பாவியல் சீண்டல்கள் நடை பெறாமல் தடுத்திட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலும் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருவதாக கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.