திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தென்பாதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ், சென்னையில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள புலிவலம் பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கர்ப்பமான ராதிகா பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு, திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மே 20-ஆம் தேதி சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு தாயிடமிருந்து தாய்ப்பால் கிடைக்காததால், தாய்ப்பாலுக்கு மாற்றாக பவுடர் பால் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டு மே 21-ஆம் தேதி அந்தக் குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது. பின்னர், குழந்தையின் உடல் திருச்சி ஓயாமரி மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் சக்திவேல் முருகன் முன்னிலையில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவர்களால் அந்தக் குழந்தைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்காக குழந்தையின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், குழந்தையின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது. ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்துத் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.