திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 6 நகரும் படிகட்டுகளும், 6 மின் தூக்கிகளும் பயணிகள் வசதிக்காக கட்டமைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பிறகு மீண்டும் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கோட்டாட்சியர் கே. அருள், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான சேவை மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் ரூ.492.55 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள், மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிகட்டுகள் அமைக்கும் பணிகள், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைத்துத் தருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரப் பேருந்துகள் அனைத்தும் முதல்தளத்துக்கு செல்லும் வகையில் பேருந்து முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பேருந்துகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பிரத்யேக தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்காக 6 இடங்களில் நகரும் படிகட்டுகள், 6 மின் தூக்கிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு நகரும் படிகட்டு, அடுத்ததாக மின் தூக்கி என்ற வகையில் தொடர்ச்சியாக 12 இடங்களில் இந்த வசதிகளைப் பயணிகள் பெற முடியும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அனைத்துப் பணிகளையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“