திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல் அளித்துள்ளார்.
திருச்சி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் நேற்று (மே 9) தமிழக முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என மாவட்ட நிர்வாகம் முன்னதாக அறிவித்திருந்தது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசுகையில், 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த நவீன பேருந்து நிலையம் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குரிய இடங்கள் மற்றும் நேர ஒதுக்கீடு தொடர்பாக போக்குவரத்துத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. இது தவிர, பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது குறித்து அரசு இதழில் வெளியிட வேண்டியதும் அவசியமாகிறது. சில நிர்வாக ரீதியான காரணங்களாலும் இன்னும் 15 நாட்களுக்கு மேல் அவகாசம் தேவைப்படுகிறது. பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்" என்று கூறினார்.
எனவே, அனைத்து நிர்வாகப் பணிகளும் முடிவடைந்து, பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி - க. சண்முகவடிவேல்