திருச்சியில் 14 ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு கேட்டு போராடி வரும் நிலையில், திருச்சி - தஞ்சை சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கக் கோரி கம்யூனிஸ்ட்க் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வீஸ் சாலை ஏற்படுத்தப்படாமல் நான்குவழி சாலை அமைக்கப்பட்டது.
பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எச்ஏபிபி போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரி சிப்காட் போன்ற பல்வேறு பகுதி விட்டுச் செல்ல பிரதான சாலையாக உள்ள திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ்சாலை அமைக்காமல் 4,500க்கும் மேற்பட்ட விபத்துகளால் 1,500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியும் சர்வீஸ் சாலை அமைக்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதை கண்டித்து, சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்போராட்டங்களை நடத்தியநிலையில், 45 மீட்டர் அகலம் உள்ள சர்வீஸ் சாலையை 33 மீட்டராக குறைத்து மேலும் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சர்வீஸ் சாலை அமைக்காமல் மக்கள் உயிருடன் விளையாடும் தமிழக அரசையும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சர்வீஸ்ரோடு மீட்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். மேலும் இப்போராட்டம் தொடர்பாக திருச்சி வருவாய் கோட்டாசியர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சர்வீஸ் சாலை கூட்டமைப்பினர் தெரிவிக்கையில்; திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை கடந்த 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நான்கு வழிச்சாலை என்றாலே பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் கட்டாயம் சர்வீஸ் சாலை என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் சர்வீஸ் சாலை அமைக்காமலேயே நான்கு வழிச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததால் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14 கிலோமீட்டர் தூரத்திற்குள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் இருப்பதால், தொடர் விபத்துகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை 1500 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இப்படி தொடர் விபத்துக்கள் நடக்கும் இந்த சாலையில் சர்வீஸ் சாலையை விரைவில் அமைக்க வேண்டும், தேர்தல் நேரத்தில் சர்வீஸ் சாலையை கட்டாயமாக அமைத்துக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்த தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்வீஸ் சாலை தொடர்பாக எந்தவித உத்திரவாதமும் கொடுக்காத நிலையில் விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்