/indian-express-tamil/media/media_files/Ekbat7XzDvd4qCKPjX6j.jpeg)
திருச்சிராப்பள்ளி மாநகர பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று காலை ராம்ஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்டதில் 15 மின் மோட்டார்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தநிலையில், மாநகராட்சி ஆணையர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலைப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது இப்பகுதிகளில் 15 வீடுகளில் குடிநீர் விநியோக குழாயில், சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டதில், 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்; மாநகர பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவதால் பொதுமக்கள் அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைக்கப் பெறுவதில்லை. தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சினால் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் மாநகர பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.