திருச்சி நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக சீமான் மீது திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
இது தொடர்பான ஆவணங்கள், சீமானுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (ஏப்ரல் 29) நடைபெற்றது. அப்போது, நீதிபதி விஜயா முன்பு டி.ஐ.ஜி வருண்குமார், தனது வழக்கறிஞர் முரளிகிருஷ்ணாவுடன் ஆஜரானார்.
மேலும், சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக சீமானின் வழக்கறிஞர் மட்டும் ஆஜரானார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மே மாதம் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
குறிப்பாக, அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சீமான் ஆஜரானபோது நடந்த சம்பவத்தையும் டி.ஐ.ஜி தரப்பு வழக்கறிஞர் விவரித்தார்.
அப்போது சீமானை வரவேற்க வந்திருந்த தொண்டர்கள், "சீமான் வாழ்க" என்று கோஷமிட்டதோடு, "ராமஜெயம் வழக்கு என்ன ஆச்சு?" என்று கேள்வி எழுப்பியதாகவும், இது மிரட்டல் விடுக்கும் வகையில் இருந்ததாகவும் அவர் கூறினார். இது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அவர் கூறினார்.
செய்தி - க. சண்முகவடிவேல்