திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜூலை 7-ஆம் தேதி சீமான் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி விஜயா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், தான் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாகவும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்தியாளர் சந்திப்பில் அவதூறாக பேசியதாகவும் குற்றம்சாட்டி, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4-ல் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்று வருகிறது. டி.ஐ.ஜி வருண்குமார் தரப்பில் ஏற்கனவே வாதங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த வாரம் சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளக்கமளித்தனர். சம்பந்தப்பட்டவர் எங்கு பேசினாரோ அந்த நீதிமன்ற வரம்புக்குள்தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும், எனவே இந்த வழக்கை விசாரிக்காமல் நீதிபதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சீமான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 4 ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி விஜயா தெரிவித்தார்.
இன்று (ஜூன் 4) நண்பகல் நீதிபதி விஜயா முன்பு டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சீமானின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் நீதிபதி விஜயா தெரிவித்தார்.
மேலும், ஜூலை 7ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது. ஜூலை 7-ம் தேதி சீமான் ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி விஜயா, சீமான் தரப்பு வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
செய்தி - க. சண்முகவடிவேல்