/tamil-ie/media/media_files/uploads/2023/08/Trichy.jpg)
இந்த அலுவலகங்களில் வீடு, மனை இடம், காலி இடம், நன்செய் மற்றும் புன்செய் உள்ளிட்ட அனைத்துப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நம்மில் பலருக்கு, சொந்தமாக வீட்டு மனை வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது. இப்போதெல்லாம் மனை விலை மிகவும் அதிகரித்துள்ளது.
இதைப் பயன்படுத்தி சொத்துக்களை தனிப்பட்ட ஆதாய நோக்கில் சிலர் மோசடியாக விற்பதும் தொடர் கதையாகத்தான் நடக்கிறது.
எனவே, வீடு கட்டுவதற்கு அல்லது முதலீட்டு நோக்கில் மனை வாங்கும்போது டி.டி.சி.பி., அப்ரூவல் உள்ள மனைகளா என பார்த்து வாங்க வேண்டும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
அதேநேரம், நாம் வாங்கும் சொத்துக்கு உண்மையான உரிமையாளரின் பெயரில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சட்ட ஆவணம் பட்டா ஆகும்.
இது மனையின் தற்போதைய உரிமையாளரின் பெயரில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்தால், தற்போதைய உரிமையாளரின் பெயருக்கு மாற்றித் தர அவரிடம் கேட்க வேண்டும்.
அப்போதுதான் நம் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டதும், விரைந்து நம் பெயருக்கு மனையின் பட்டாவை மாற்றிக்கொள்ள முடியும். வீட்டுக் கடன் வாங்குவது எனில், சொத்தின் பட்டா தேவைப்படும். சிட்டா என்பது நிலத்தின் பரப்பளவு, சொத்து உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை போன்றவற்றைக் குறிப்பிடும் நில வருவாய் பதிவேடு ஆகும்.
கிராம நிர்வாக அதிகாரிக்கு (VAO) பட்டா, சிட்டா ஆவணங்களைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அந்த வி.ஏ.ஓ.க்கள் பலர் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம் விலைக்குப்போய் விடுகின்றனர்.
அவர்களைப்பயன்படுத்தி சில ரியல் எஸ்டேட் அதிபர்கள் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகளை போலி ஆவணங்கள் மூலம் நாடு முழுவதும் பதிவு செய்துக்கொண்டிருக்கின்றனர் என்பது நிதரசனமான உண்மை.
அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் டி.டி.சி.பி. அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகள் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் டி.டி.சி.பி., அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 16-10-2016-ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் வரன்முறை திட்டத்தை 4-05-2017 அன்று அரசு அறிவித்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாத மனை பத்திரப்பதிவுகள் கண்டறியப்பட்டன. இதுபோன்ற பதிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை திமுக தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டது. இதுபோன்ற மனைகளுக்கு பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டது.
மேலும், அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது, மீறினால் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதிவுத்துறை அமைச்சர் தொடர்ந்து சார்பதிவு அதிகாரிகளை எச்சரித்தும் வந்துள்ளார். ஆனாலும், திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிலர் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் 2016 அக்டோபருக்குப் பின் உருவாக்கப்பட்ட வீட்டுமனைகள் டி.டி.சி.பி. அப்ரூவல் இல்லாமலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்காக உரிய கட்டணம் செலுத்தி மனைப்பிரிவுக்கு ஒப்புதல் வழங்கி மனைப்பிரிவை வரன்முறைப்படுத்தி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி கமிஷனர்கள், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் ஆணைப்பெற்றது போன்ற போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒரே சர்வே எண்ணில் 5 செண்ட் முதல் 20 செண்ட் வரை பல ஆவணங்கள் விளை நிலங்கள் என பதிவு செய்யப்பட்டு போலி ஆவணங்கள் மூலம் வரன்முறை செய்யப்பட்டிருக்கின்றது.
20 செண்டுக்கு குறைவான நிலத்தை உறவுமுறை இல்லாத நபர்கள் கிரையத்திற்கு வாங்கி பாதை அமைத்து மனைகளாக பிரித்துக்கொள்கின்றனர். ஆனால், 2016 அக்டோபருக்குப் பின் விளைநிலமாக கிரயமாக வாங்கப்பட்ட சொத்துகளை அங்கீகாரம் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை என்பது சார்பதிவாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் சிலர் இதுபோன்ற சிண்டிகேட் அமைத்து இதுபோன்ற பத்திரங்கள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்துள்ளனர்.
இதனால், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதுகுறித்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அதனால், மாவட்ட நிர்வாகம், பதிவுத்துறை, போலீஸார் என அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரியல் எஸ்டேட் பிரமுகர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து திருச்சி சரக பதிவுத்துறை டி.ஐ.ஜி.ராமசாமியிடம் கேட்டபோது, எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் அப்ரூவல் இல்லாத ஆவணங்கள் திருச்சி மண்டலத்தில் பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்த புகார்களும் என் கவனத்திற்கு இதுவரை வரவில்லை. அதுபோன்று வந்தால் உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்திற்கு புறம்பாக எந்தவிதமான பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அந்த பதிவினை பதிவு செய்த சார்பதிவாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.