நித்தியானந்தா ஆசிரமம் சார்பில் கைலாச விருதுகள் என்ற பெயரில் விஜயதசமி தினத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி சமூக வலைதளம் மூலம் ஆன்லைனில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 நபர்களுக்கு விருது வழங்கி உள்ளனர். அதில் திமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளருமான திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.
அதற்கு நன்றி கூறும் வகையில் வீடியோவை ஒன்றை தனது ட்விட்டர் பக்கதில் சூர்யா சிவா பதிவு செய்துள்ளார். தொடர்ந்து திருச்சியில் இன்று சூரியா சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இந்து மதத்தை பாதுகாக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை பாராட்டி நித்யாநந்தா தர்ம ரட்சகர் என்கிற விருதை வழங்கி உள்ளார்.
அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒருவர் விருது கொடுக்கும் போது அதை யாரும் மறுக்க கூடாது.
அவர் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம். அவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. வட மாநிலங்களில் பல சாமியார்கள் இருக்கலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு உள்ள ஒரே சாமியார் நித்தியானந்தா. அவர் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதிலிருந்து அவர் வெளியே வருவார்.
நித்தியானந்தா பிரபலமானவர் என்பதால் பொய்யான புகார்கள் எழுவது சாதாரண விஷயம் தான். அவர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் தவறானது என்று கூறினார்.
நித்யானந்தாவின் தூதுவராக உங்களை பார்க்கலாமா என்ற கேள்விக்கு; தூதுவராக இல்லை, என்றைக்கும் அவரின் தீவிர பக்தனாக இருப்பேன் என சூரியா கூறினார்.
தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் பேரணி தமிழ்நாட்டில் நடத்தவே கூடாது என்று இடதுசாரிகள் சொல்லி வருகிறார்கள் என்ற கேள்விக்கு, நடத்தவே கூடாது என்று நினைக்கலாம், ஆனால் நூறு சதவீதம் யாராலும் தடுக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தே தீரும்.
திருமாவளவன் அல்ல தமிழக முதலமைச்சரை நினைத்தாலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் யாரும் ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்துப் பேசுவதில்லை. 100% பெரும்பான்மையாக இருக்கக்கூடிய கட்சிகளான திமுக, அதிமுக, பாமக போன்று பெரிதாக பேசக்கூடிய கட்சிகள் பேசுவது கிடையாது.
திருமாவளவன் தன்னைபேசும் பொருள் ஆக்குவதற்காகவும், RSS ன் உண்மையாக குணத்தையும் தெரிந்ததால், அந்த சங்கத்துடைய பலத்தை அறிந்து அவர் பேட்டியிலேயே திமுகவையும், அதிமுகவையும், பாமகவையும் அழித்துவிடலாம். ஆனால் நூறாண்டு காலமானாலும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இரண்டையும் அவர்கள் அழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபராக இருக்கலாம், ஆனால் இன்னும் விடுதலை சிறுத்தை கட்சி, மற்ற கட்சிகளிடம் ஒரு சீட்டுக்கும், ரெண்டு சீட்டுக்கும் கேட்டுக்கொண்டு இருக்கிறது. முதலில் அதை வளர்க்க அவர்கள் போராட வேண்டும் என கூறினார்.
அதிமுகவில் எங்களுக்கு கேட்ட இடங்கள் கிடைக்காததால், உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையாக தனித்து நின்றோம். வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்று ஜெயித்து எத்தனை அமைச்சர்கள், எத்தனை எம்பிக்கள் வருவார்கள் என நீங்கள் பார்ப்பீர்கள் என குறிப்பிட்டார்.
தனித்து போட்டியிட போகிறீர்களா என கேட்டதற்கு; கூட்டணியில் இருந்து, நேரடியாக தாமரை சின்னத்தில் நிற்போம் எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“