திருச்சி சிவா வீடு மீது தாக்குதல், காவல் நிலையத்தில் மோதல்.. கே.என். நேரு தீவிர விசுவாசிகள் தி.மு.க.வில் இருந்து இடைநீக்கம்

காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Trichy Siva DMK MP House attacked Tamil News
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்

காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக திமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கவுன்சிலர்கள் உட்பட நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் கே என் நேரு இன்று காலை புறப்பட்டார். அந்த வகையில், இன்று காலை திருச்சி கன்டோன்மென்ட் அருகில் உள்ள ஸ்டேட் பேங்கர்ஸ் காலனியில் இறகு பந்து மைதானத்தை திறக்கச் சென்றார்.
இதே நேரம் அந்த பகுதியிலேயே வசிக்கும் திருச்சி சிவா எம்பியின் பெயரை பூங்கா சிறப்பு கல்வெட்டிலும் போஸ்டரிலும் போடவில்லை என அவரது தரப்பினர் அமைச்சர் கே என் நேருவுக்கு கருப்புக்கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்பியின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், திருச்சி செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்திலையும் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர்.
திருச்சி திமுகவின் உட்கச்சிப் பூசல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியின் பிரமுகர்கள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க துவங்கினர்.

இதனை அடுத்து காவல்துறையும், திமுக தலைமையும் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. காலையில் நடந்த சம்பவத்திற்கு மாலையில் தீர்வு கிடைத்திருக்கிறது.
திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து எம்பி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் துரைராஜ், 54வது வார்டு பகுதி செயலாளர் திருப்பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பகுதி செயலாளர் திருப்பதியை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதே நேரம், அமைச்சர் கே. என். நேருவின் தீவிர விசுவாசிகளான திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று காலை நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்த நிலையில் தற்போது தமிழ்நாடு காவல்துறை, திமுக தலைமை படு வேகமாக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy dmk workers who attacked police station suspended from party

Exit mobile version