திருவெறும்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் வ.உ.சி. நகரைச் சோ்ந்தவர் வ. மாரியப்பன் (65). திராவிடர் கழக திருவெறும்பூர் ஒன்றியத் தலைவராக இருந்த இவர், துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று மாலை பணிக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ராவுத்தான் மேடு அருகே சென்று திரும்பியபோது, திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற கார் ஒன்று, மாரியப்பன் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த துவாக்குடி போலீசார், மாரிமுத்துவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்