திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் துரை வைகோ பேசியதாவது:-
தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசுப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.
மத்திய அரசிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் மத்திய அமைச்சர் தேசிய கல்விக்கொள்கையை ஏன் ஏற்க முடியாது என்று சொல்லுகிறீர்கள் என கேட்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் என்று கூறினோம். ஆனால் மூன்றாவது மொழியாக ஹிந்தி, சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என சொல்வது ஏன்?
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதியை முழுமையாக வழங்க முடியும் என தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்கவில்லை.
திருச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் ஓடுதளம் விரிவாக்கம் பணிகள் 97 சதவிகிதம் முடிந்துள்ளது. இன்னும் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
பொங்கல் சிறப்பு தொகுப்பாக மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது ஆங்கில புத்தாண்டு ஜோக் ஆகும். அதுகுறித்து பேச தேவையில்லை.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு பா.ஜ.க தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகயளவில் நடந்து வருகிறது. அதேபோன்று தலைநகர் தில்லி சட்ட-ஒழுங்கு பா.ஜ.க கையில் உள்ள நிலையில், அங்கு எந்த பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக வாரத்துக்கு ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. 2024 இல் மட்டும் தில்லியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரிலே மக்களுக்கு பாதுகாப்பில்லை.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு, இனிவரும் காலங்களில் நடக்காமல் மாநில அரசு நடவடிக்கையை தீவிர படுத்தப்படவேண்டும். மாணவி பாலியல் புகாரில் சம்பந்தப்பட்டவரை 5 மணி நேரத்தில் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது மாநில அரசு. மேலும் மாணவி பாலியல் புகாரில் தி.மு.க நிர்வாகிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை எழுப்பி வருகிறார், இது முற்றிலும் தவறானது.
இவ்வாறு துரை வைகோ கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.