/indian-express-tamil/media/media_files/2025/09/01/trichy-accident-2025-09-01-14-01-01.jpg)
திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் காரில் சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அந்த காரில் தென்காசி ஆலங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார் அவரது மனைவி யசோதா இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் நண்பர் விஜயபாபு உள்ளிட்ட 5 பேர் TN76 BA 2045 என்ற காரில் பயணித்துள்ளனர்.
இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த TN 45 N 3982 அரசு பேருந்தின் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும் கார் ஒட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தை அடுத்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து இரண்டு நாள் விடுமுறையை முடித்து சென்னை திரும்பிய வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.