அ.ம.மு.க நிர்வாகி சாருபாலா தொண்டைமானின் மகள் ராதா நிரஞ்சனி தொண்டைமான் தன்னை பா.ஜ.கவில் இணைத்துக் கொண்டார். தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான இவர் அண்ணாமலை முன்னிலை பா.ஜ.கவில் இணைந்திருப்பது அ.ம.மு.கவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பதாவது, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசியும், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனையும், சிறந்த சமூக சேவகியுமான, சகோதரி, ராஜகுமாரி ராதா நிரஞ்சனி ராஜாயி அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், ஆளுமைத் திறனாலும் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, நேற்றைய தினம் தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார்கள். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சமஸ்தான மகாராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள், 1948-ம் ஆண்டு, சுதந்திர இந்தியாவுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைத்து, சமஸ்தானத்திற்குச் சொந்தமான 48 லட்சம் ரூபாய் நிதியையும், மொத்த சொத்துக்களையும், நமது நாட்டிற்கே வழங்கியவர். புதுக்கோட்டை தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டபோது, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க வழங்கியவர்.
நாட்டுக்காக, மக்கள் நலனுக்காகவே வாழ்ந்த பெரும் பாரம்பரியம் மிக்க ராஜகுடும்பத்தில் இருந்து, சமூகத்திற்காகவும், பொது மக்களுக்காகவும் உழைப்பதற்கு முன்வந்திருக்கும் சகோதரி ராதா நிரஞ்சனி தொண்டைமான் அவர்களின் வருகை, பாஜகவுக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பது உறுதி எனப் பதிவிடப்பட்டுள்ளது.
![Tri BJP1.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/qXUlCO9sb2hUCmaQ7wkT.jpeg)
முன்னதாக, சாருபாலா தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தான குடும்பத்தை சேர்ந்தவர். நீண்ட காலமாக காங்கிரஸில் பயணித்தவர். பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து, திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க கட்சியில் மறைந்த ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்ட பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) கழக அமைப்பு செயலாளர் மற்றும் திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக பணியாற்றினார்.
கடந்த 2001 முதல் 2009 வரை திருச்சி மாநகராட்சி மேயராக இருந்தவர். 2009-ம் ஆண்டு தேர்தலில் வெறும் 4300 வாக்குகளில் தோல்வியை தழுவியவர். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டு திருச்சி தொகுதியில் 10% வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்